மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர், தற்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் இந்தியாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான மாநில அளவிலான தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 27, 2026) மாலை 6:30 மணி அளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் ‘டீம் இந்தியா’ உணர்வுடன் செயல்பட்டது போல, தற்போதைய போர்க்காலச் சூழலிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் இருப்பதால், அந்த மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் (Chief Secretaries) மட்டும் அமைச்சரவைச் செயலகம் நடத்தும் தனி ஆலோசனையில் பங்கேற்பார்கள். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளைத் தடுத்தல், கள்ளச்சந்தையை ஒடுக்குதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும்.
ஏற்கனவே இந்தியாவிடம் 60 நாட்களுக்கான எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ள நிலையில், மாநில அரசுகள் மக்களுக்குத் தங்குதடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்த உள்ளார். ஈரானிய கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்தப் போர் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற அச்சத்தில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


