காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகிக்க, அக்கட்சியின் முன்னாள் மாநில துணை தலைவர் கமலாம்பாள் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியரின் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு கிடையாது. அந்த பயத்தின் காரணமாக தான் நம் கட்சிக்குள் பிரச்சினையை கிளப்புகிறார்கள். நடப்பு பிரச்சினைகளுக்கு எல்லாம் முழுக்க காரணம் திமுக தான் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வன்னியருக்கான இட ஒதுக்கீடு தருவதாக நம்ப வைத்து நான்கு வருடங்களாக கழுத்தறுத்து விட்டது நடப்பாச்சி. இந்த ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. நிலைகுலைந்த தான் காரணமாக தான் நம் கட்சிக்குள் பிரச்சினையை கிளப்பிப் பார்க்கிறார்கள். நான் அமைதி காப்பதே எனது பலன். நான் ஒருபோதும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். அப்படி செய்தால் அதுவே என் வாழ்நாளில் இறுதி நாள். ஏற்கனவே மகாபலிபுர கூட்டத்தில் வன்னியரின் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு செல்லக்கூடாது என்று கூறி இருந்தேன். தற்போது நடக்கும் உள்கட்சி பிரச்சனைக்கு காரணம் முழுக்க திமுக தான். நானோ, என் தந்தையோ கிடையாது. திமுகவின் இந்த சூழ்ச்சி வெகு நாட்களுக்கு வேலை செய்யாது. நடப்பாச்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை. அதை மூடி மறைக்கவே நம்முள் பிரச்சனை செய்து பார்க்கிறார்கள். அந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட சிலர், குடும்பத்தில் உள்ள அதிகார உரிமை பிரச்சினைக்கு திமுக தான் காரணம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.