அகிலன், ஜெயகாந்தனுக்குப் பின் வைரமுத்து!! என் வயதை விருது குறைத்துவிட்டது!! தமிழ் கவிதைக்கு மகுடம்!!

poet-vairamuthu-conferred-jnanpith-award-2026-third-tamil-writer-literary-milestone

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘ஞானபீடம்’ விருது, 2026-ஆம் ஆண்டிற்காகக் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாகத் தமிழில் 1975-ல் எழுத்தாளர் அகிலனும் (சித்திரப்பாவை), 2002-ல் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சிகரத்தைத் தொட்ட மூன்றாவது தமிழ் ஆளுமை என்ற பெருமையைக் கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார்.

தனக்குக் கிடைத்த இந்த கௌரவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வைரமுத்து, “இதுவரை தமிழுக்குக் கிடைத்த இரண்டு ஞானபீட விருதுகளும் உரைநடை சார்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கவிதைக்கு இந்த விருது இதுவரை கிடைக்கவில்லையே என்ற ஒரு குறை என் இலக்கியப் பயணத்தில் இருந்தது. இன்று அந்த நீண்ட காலக் குறையை இந்த விருது துடைத்தெறிந்துள்ளது. இந்த அங்கீகாரம் என் வயதைக் குறைத்து, என்னுள் ஒரு புதிய ஊக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. இனி என் கவிதைப் பயணம் ஒரு புதிய பாய்ச்சலோடு தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் ஏழு முறை தேசிய விருதுகளை வென்ற வைரமுத்துவுக்கு, ஞானபீடம் கிடைத்திருப்பது அவரது அரை நூற்றாண்டு காலத் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த உச்சகட்ட மகுடமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram