தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மேகங்கள் இப்போதே சூழத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கூட்டணி குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
“தேமுதிக இரண்டு பக்கமும் (திமுக மற்றும் அதிமுக) கூட்டணி பேரம் பேசுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை; யாருடைய காலையும் பிடிக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
2026 தேர்தல் முடிவுகள் தேமுதிக-விற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் எனக் குறிப்பிட்ட அவர், “தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்தத் தரப்புதான் வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும். இதுதான் எதார்த்தம்” எனத் தனது கட்சியின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
மேலும், “தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம் என்னவோ, அதை ஏற்றுத்தான் எங்களது முடிவு இருக்கும். மிகவும் நிதானமாக யோசித்துத்தான் சரியான நேரத்தில் கூட்டணியை அறிவிப்போம்” என்றார்.
விஜயகாந்திற்குப் பிறகு தேமுதிக-வை வழிநடத்தி வரும் பிரேமலதா, வரும் தேர்தலில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் உறுதியாக உள்ளார். புதிய கட்சிகளின் வருகை மற்றும் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தேமுதிக-வின் இந்த ‘வெயிட் அண்ட் வாட்ச்’ கொள்கை மற்ற கட்சிகளைச் சற்று யோசிக்க வைத்துள்ளது. “மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியே அமையும், அதில் தேமுதிக முக்கியப் பங்கு வகிக்கும்” எனத் தனது பேட்டியை அவர் நிறைவு செய்தார்.


