கொல்கத்தா: பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நாட்டின் எல்லா பெண்களையும் அவமதிப்பாதாகவும், “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் அரசியலில் ஆதாயம் தேடுகிறார் என்றும் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிப்பூர்துவாரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியை நேரடியாக கடுமையான முறையில் விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் அரசியலில் ஆதாயம் தேட முயல்வதாக குற்றம் சாட்டினார்.
பேசுகையில் பஹல்கான் தாக்குதலில் சுற்றுலா பயணிகளை கொன்று பயங்கரவாதிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? , அமெரிக்க அதிபர் ஏதாவது சொன்னால் ஏன் அடுத்த நொடியே அமைதியாகிவிடுகிறீர்கள்? என அடுத்தடுத்து கேள்விகளை வைத்து கடுமையாக விமர்சித்தார்.அனைத்துக் கட்சிகளும் தேசத்தின் நலனுக்காக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைப்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால், பிரதமர் ஆதாயம் தேடுகிறார். அரசியலில் ஆதாயம் தேட இது நேரமல்ல. தேர்தல் பிரச்சாரத்திற்காகவே மத்திய அரசு “ஆபரேஷன் சிந்தூர்”என பெயரிட்டுள்ளது.
பிரதமர் அரசியல் ஆதாயம் தேட முயல்வது அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு சிந்தூரை வியாபாரம் செய்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை போல ஆபரேஷன் வங்கம் இருக்கும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. பிரதமர் மோடி நடந்து கொள்வது பெண்களை அவமானப்படுத்துவதற்கு சமம்.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்தா, சென்ற முறை நான் அங்கு சென்றபோது 4 நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கவில்லை, ஆனால் மற்ற முதல்வர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. பின் எதற்கு அங்கு செல்ல வேண்டும்? என்றும், உங்களுக்கு நான் சவால் விடுகிறேன் தொலைக்காட்சி விவாதத்திற்கு வாருங்கள், உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.