திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் அருகே உள்ள மங்களப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக பணியாற்றினார். நத்தம் பகுதியில் சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வட்டி வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் வசூல் செய்து தனியார் நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். பொதுமக்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
நிதி நிறுவனம் பணம் கிடைக்க காலதாமதம் ஆனது. இதனால் பச்சையம்மாளை நாளுக்கு நாளாக அவர்கள் மிரட்டி பணத்தை கேட்டதாக கூறுகின்றன. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பச்சையம்மாள் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.
தீயின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஓடி வந்ததை பார்த்த பொதுமக்கள் பச்சையம்மாளின் உடலில் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். பின் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
80% சதவீத தீக்காயத்துடன் இருந்த பச்சையம்மாளிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.