₹5.24 கோடி சுருட்டிய தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்!! ஆன்லைன் வர்த்தக மோசடி!!

Producer Ravinder Chandrasekhar who collected ₹5.24 crores

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, தொழிலதிபர் ஒருவரிடம் ₹5.24 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான ரவீந்தர் சந்திரசேகர் (45) கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ரவீந்தர் சந்திரசேகர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னைச் சந்தித்ததாகவும், தான் ஒரு தொழிலதிபர் என்றும், தனது நிறுவனத்தில் ஆன்லைன் வர்த்தகம் (Online Trading) செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நம்பிய பாலாஜி கபா, ரவீந்தர் சந்திரசேகரின் நிறுவனத்தில் ₹5.24 கோடி முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பின்னர், லாபம் எதுவும் கிடைக்காததுடன், ரவீந்தர் சந்திரசேகர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக பாலாஜி தனது புகாரில் தெரிவித்திருந்தார். பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ரவீந்தர் சந்திரசேகர் சரியாகப் பதிலளிக்காமல் இழுத்தடித்ததாகவும், தனது பணத்தைத் திருப்பித் தர மறுத்ததாகவும் புகார் கூறினார்.

புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ரவீந்தர் சந்திரசேகர் பணத்தை மோசடி செய்தது உறுதியானதையடுத்து, நேற்று இரவு அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram