மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போரின் கோரத்தாண்டவம், தற்போது உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரைப் பலமாகப் பாதித்துள்ளது. கத்தாரின் முக்கியத் திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், அந்நாட்டின் எரிசக்தித் துறை முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இது குறித்து கத்தார் எரிசக்தி நிறுவனம் (Qatar Energy) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல்களால் மட்டும் சுமார் ரூ.1.6 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய எல்என்ஜி ஏற்றுமதியில் கத்தாரின் பங்கு தற்போது அதிரடியாக 17 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் பாதிப்பு உடனடியாகச் சரியாகும் நிலையில் இல்லை என்பதுதான் உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது. “உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பச் சிதைவுகள் மற்றும் கட்டமைப்புச் சேதங்களை முழுமையாகச் சீரமைத்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரக் குறைந்தது 5 ஆண்டுகள் தேவைப்படும்” என கத்தார் எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் பல நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் இயற்கை எரிவாயுத் தேவையில் பெரும் பகுதியை கத்தார் பூர்த்தி செய்து வரும் நிலையில், இந்தத் தடை இந்தியாவிலும் சிஎன்ஜி (CNG), உர உற்பத்தி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். ஹார்முஸ் நீரிணை முடக்கம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் உற்பத்தித் தளங்களே சிதைக்கப்பட்டு வருவது சர்வதேச எரிசக்தி சந்தையில் ஒரு நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.


