சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ரஜினி 173’ குறித்த உற்சாகமான தகவல் வெளியாகியுள்ளது. ‘டான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தின் முழு கதை மற்றும் திரைக்கதை பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஸ்டைல் மற்றும் சிபி சக்ரவர்த்தியின் கமர்ஷியல் திரைக்கதை இணைந்து இந்தப் படம் உருவாக உள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, ரஜினி இந்தப் படத்தில் இணைய உள்ளார்.
இந்தப் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் மார்ச் இறுதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது. தலைவர் ரஜினியின் 173வது படமும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறும் என கோலிவுட் வட்டாரங்கள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டன.


