பெங்களூரு: ஐ.பி.எல் 2025 சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணியான RCB, தங்களின் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் எட்டாத உயரத்தில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்த மகிழ்ச்சியின் நடுவே துயரச் செய்தியும் வெளியாகியுள்ளது.
சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற திறந்தவெளி பேரணியில் ஆர்.சி.பி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதல் அங்கும், சாலை முழுவதும் திரண்டனர். வீரர்களை பார்ப்பதற்கான ஆர்வம் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்தக் கொண்டாட்டத்தின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுச்சுவருகள் மற்றும் வேலிகளில் ஏறி ரசிகர்கள் உள்ளே புக முயற்சித்தனர்.
இதனால் போலீசார் கட்டுப்பாட்டை இழந்து, சிலர் மீது லேசான தடியடி நடத்தினர். ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு அதிகமாகி, மூச்சுத் திணறல் காரணமாக சிலர் மயங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. இப்பொழுது மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளது பகீர் அளிக்கிறது.
இதனைக் தொடர்ந்து போலீசார் கூட்டத்தை விரட்டியடித்து, மருத்துவ குழுக்களை துரிதமாக அழைத்து வந்தனர். மருத்துவமனைக்கு பலர் கொண்டுசெல்லப்பட்டனர். ஏற்கனவே காலை முதல் பெய்த மழை காரணமாக ரசிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளான நிலையில், கூட்ட நெரிசலும் இக்கட்டான சூழலை உருவாக்கியது. டிஆர்கே. சிவக்குமார் நேரில் வந்து ஆர்.சி.பி வீரர்களுக்கு பாராட்டு வழங்கியதை தொடர்ந்து, விழா மிகுந்த மகிழ்ச்சியாக ஆரம்பமானது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சியே சோகமாக மாறியது.
விராட் கோலி தலைமையிலான RCB அணிக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த IPL வெற்றி ரசிகர்கள் மனதில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் அதிகாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா அரசு மற்றும் போலீசார் இணைந்து விபத்திற்கான காரணங்களை விசாரித்து வருவதாகவும், மரணம் அடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.