மூணாறு: வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் “ரெட் அலர்ட்” கொடுக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகளை சேதப்படுத்துவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்று மாலை (மே 29) நிலவரப்படி 24 மணி நேரத்தில் 62 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இடுக்கியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருவர் பலியாகி உள்ளனர். மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணை பகுதியில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வெகு நேரம் போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலும் மழை பகலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. ஆறு நாட்களில் மொத்தம் 112 வீடுகள் இதுவரை சேதம் அடைந்துள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மூணாறு மாவட்டத்தில் 4.35 கோடி மதிப்புள்ள விவசாய பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. அதில் மிளகு, ரப்பர், வாழை, ஏலம், கொக்கோ உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றினால் மரம் சாய்ந்து விழுந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. மலங்கரா, பாம்ப்ளா, கல்லார்குட்டி போன்ற அணைகள் நேற்று மாலை திறக்கப்பட்டது. இடுக்கி அணை நீர்மட்டம் இரண்டு நாட்களில் 5.43 அடி உயர்ந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு “ரெட் அலர்ட்” தொடர்வதால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் மற்றும் தோட்டப்பணிகள் ஆகியவற்றிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அம்மாவட்ட நிர்வாகம். அதனால், ஏலம் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தோட்ட பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் தோட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மூணாறில் சராசரி மலை 96.52 மில்லி மீட்டர் பதிவாகியது. அதிகபட்சம் மழை என்பது 100.80 மில்லி மீட்டர் அளவு என கணக்கிடப்பட்டுள்ளது.