பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனரும் தலைவருமான டாக்டர் ராமதாஸ், கட்சியின் செயல்தலைவர் அன்புமணிக்கு எதிராக தனது நிலைப்பாட்டை மேலும் உறுதியாக அறிவித்துள்ளார். “என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவரின் பொறுப்பை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்ற அவரது சமீபத்திய பேச்சி, பாமக உள்கட்சி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ராமதாஸ் மற்றும் அவரது மகனான அன்புமணி இடையே வலிமையான கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.
கடந்த மாநாட்டில் அன்புமணியின் ஆதரவாளர்கள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களை முன்வைத்தனர். இதனால் ராமதாஸ் பக்கத்தினர் அதிருப்தியில் ஆழ்ந்தனர். “எனக்கு கடைசி வரை மக்கள் ஆதரவு உள்ளது” 2026 தேர்தல் முடிந்த பின் பதவியை மாற்றலாம் என்று நினைத்தேன். ஆனால் மாநாட்டிற்குப் பிறகு நடந்த செயல்கள் என் நெஞ்சை குத்தியது. என் மீது நடத்தப்பட்ட விமர்சனங்கள் நேரடியாகத் தாக்கியுள்ளன. கட்சியில் எனக்குக் கிடைக்கும் ஆதரவு எக்காலத்திலும் குறையவில்லை. கடைசி வரை நானே தலைவர்” என்று குறிப்பிட்டார்.
“என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என ஆரம்பத்தில் கூறினேன். ஆனால் அந்தக் கொள்கையை கூட பாதுகாக்க முடியவில்லை. எனவே, தற்போதைய தலைமைப் பொறுப்பிற்கு எவரையும் உடனடியாக அழைத்துச் செல்ல முடியாது” என்றார். ராமதாஸ், தனது பேட்டியில் நேரடியாக அன்புமணியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும்,“ஒரு சதவீதத்தை மட்டுமே அவர்களுடைய குடும்பத்திற்கு விட்டுவிட்டேன். அவர்களது செயல்கள் எனக்குப் பெரும் வருத்தத்தைத் தந்துள்ளன”
என்று தெரிவித்ததன் மூலம், கட்சிக்குள்ளேயே குடும்ப அரசியல், தலைமைப் போட்டி போன்றவை தீவிரமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது. பாமக என்ற கட்சியில் தற்போது உள்கட்சி மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சி தொண்டர்கள், மாநில நிர்வாகிகள் இரண்டாகப் பிரிந்துள்ளனர். ஒரு பக்கம், “தலைவர் பதவியிலிருந்து ஒதுங்க வேண்டும்” எனும் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.
மறுபக்கம், “அய்யா தலைமையில் தான் பாமக வளர்ந்தது; அவர் பதவியை விட்டால் நம்பிக்கை சரியும்” எனும் பழைய கட்டமைப்பு நிற்கிறது. இந்த நிலையில், 2026 தேர்தலுக்குள் பாமகவில் உண்மையான தலைமைக்கான மாற்றம் நிகழுமா? அல்லது குடும்ப அரசியல் இன்னும் பல ஆண்டுகள் தொடருமா என்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.