கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இன்று கரூர் சென்று பலியானோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் இதுபோன்ற துயரமான நிகழ்வு நடைபெறக் கூடாது. முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. நெரிசலில் பலியானோரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இது முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே. விரைவில் மக்களவை உறுப்பினர் ஜோதி மணியுடன் ஆலோசித்து, இரண்டாம் கட்ட உதவியும் வழங்கப்படும். மேலும், இந்த துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் மூன்று நாட்கள் அஞ்சலி துக்கம் கடைபிடிக்க இருப்பதாகவும், அந்தக் காலப்பகுதியில் நடைபெறவிருந்த அனைத்து கட்சித் திட்டங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கரூரில் நடந்த இந்த துயர சம்பவம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றன.


