கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் தனது அறிக்கையில், “கரூரில் நடந்த இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு நான் ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்குகிறேன். மேலும், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கும் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விஜயின் மனிதாபிமானமான முடிவை பாராட்டி பதிவுகள் இடுகின்றனர். இதற்கிடையில், கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளன. அரசு சார்பாகவும் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், விஜயின் நிதியுதவி சேர்க்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக இது அமையும் என கூறப்படுகிறது. மேலும், தவெக நிர்வாகிகள், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் விஜயின் சார்பாக தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். மருத்துவர்களுடன் பேசி, சிகிச்சை நடவடிக்கைகள் விரைவாக நடைபெறுவதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயரத்தில் பல உயிர்கள் பறிபோன நிலையில், அந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை இணைந்து பணிபுரிந்து வருகின்றன. விஜயின் நிதியுதவி முடிவு அவரது மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.


