தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ் இ பி சி என்கின்ற மின்வாரியப் பவர் நிறுவனம் 525 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலையத்தை சில வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தது. இதற்கு கடந்த 1988 ஆம் ஆண்டே அனுமதி கேட்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. மேலும், எஸ் இ பி சி சில கண்டிஷன்களையும் கூறியிருந்தது.
இந்த அனல் மின் நிலையம் 2018 ஆம் ஆண்டுக்குள் தொடங்க வேண்டும். இதன் அதிகபட்ச மூலதன செலவு ரூபாய் 3,514 கோடி மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.சில தொழில்நுட்ப காரணங்களால் 2021 ஆம் ஆண்டு தான் இந்த பணி நிறைவடைந்து, தொடங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதன் மூலதன செலவு 3,249 கோடி ரூபாயிலிருந்து 5,118 கோடி ரூபாயாக உயர்த்தியிருந்தது.
ஒழுங்குமுறை ஆணையம் மூலதன செலவை உயர்த்தினால், நிலை கட்டணமானது இதுவரை 724 கோடியாக இருந்த நிலையில் அது 1140 கோடியாக உயர்த்தப்படும். அவ்வாறு உயர்த்தப்பட்டால் அது மக்களின் மூலமாகத்தான் மீண்டும் வசூல் செய்யப்படும்.
மீண்டும் மின் கட்டணம் உயரும். எனவே எஸ்இபிசி தாக்கல் செய்துள்ள மனுவை மக்களின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஒழுங்குமுறை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மின் துறை அமைப்பின் தலைவர் காந்தி தெரிவித்துள்ளார். இதனால் மேலும் மக்களின் தலையில் பாரத்தை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.