தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுவதால் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் முதலில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் நான்கு தனிப்படைகள் சேர்க்கப்பட்டு விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும், கைது நடைபெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடல் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் கழுத்து பகுதி மற்றும் தொண்டைப் பகுதியில் முறிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என் மகளை திரும்ப பெற முடியாது, ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடித்து கண்முன் நிறுத்த வேண்டும் என மாணவியின் தந்தை மிகுந்த சோகத்துடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


