குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-182), புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் நேரடியாக மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பயணித்த 241 பேர் உட்பட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 24 பேர், மொத்தம் 265 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நேரத்தில் விடுதியில் இருந்த 5 மருத்துவ மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் பலர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில், 14 வயதான ஆகாஷ் பட்னி என்ற சிறுவன் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தின் எரிவாயு நிரப்பிய பாகங்கள் அவன் மீது விழுந்ததால், உடல் முழுவதும் தீக்காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான். தனது மகனை காப்பாற்ற துடித்த தாயார் சீதாபென் பட்னி, நெருப்பு மற்றும் உலோகத் துண்டுகளால் தீக்காயம் அடைந்து தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தகவல்களில், விமானத்தின் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாட்டின் சிவில் விமான போக்குவரத்துத் துறை மற்றும் ஏர் இந்தியா குழு, விசாரணைக்கு உதவிவருகின்றனர்.
பல உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பதால் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படுகின்றன