மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான நிலையில், கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்புகள் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தது. த்ரிஷா, சிம்பு, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், 1987-ல் வந்த ‘நாயகன்’ படத்திற்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் மீண்டும் உருவான திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. தடை ஏற்பட காரணம், கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் கூறியது,
“தமிழும் கன்னடமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை. கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது.” எனும் கருத்து. இந்த உரை கர்நாடகா சில அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. “கன்னடத்தை தாழ்வாக கூறுகிறார்கள்” என்ற எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் பரவியது இதனால் ஏற்பட்ட போராட்டங்கள், திரையரங்கு எதிர்ப்புகள் மற்றும் பட வெளியீட்டுக்கு தடை ஆகியவையும் தொடர்ந்து நடந்தன. இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. தடை என்பது அரசியல் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் அமையக்கூடாது என தெரிவித்த நீதிமன்றம், இப்படம் வெளியாவதை தடுக்கும் எந்த சட்ட அதிகாரமும் கர்நாடகா அரசுக்கு இல்லை என உறுதியாக தெரிவித்தது. அத்துடன், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுவது, நீதிமன்றத்தின் வேலையல்ல. அவரை மிரட்டுவது அல்லது கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரம் மற்றும் கலை வெளியீட்டு உரிமையை வலியுறுத்தும் நியாய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த தீர்ப்பு, இந்தியாவில் தொடரும் “சினிமா மீது செலுத்தப்படும் அரசியல் மற்றும் சமூக அழுத்தங்கள்” தொடர்பாக புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. படக்குழு, திரையரங்குகள், ரசிகர்கள் அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்க, படம் விரைவில் கர்நாடகா மாநிலத்தில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.