ஏழை மக்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் நோக்கில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச வீட்டு மனை பட்டா திட்டம், பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நனவாக்கி வருகிறது. இத்திட்டம் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, மாநிலம் முழுவதும் 4.37 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், தாங்கள் வசிக்கும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற்று பாதுகாப்பான வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்த பட்டா பெற்றவர்களுக்கு, வங்கிகளில் வீட்டுக் கடன் பெறுதல், மின்சார இணைப்பு, குடிநீர் வசதி மற்றும் அரசின் பிற நலத்திட்டங்களின் பயன் பெறுதல் எளிதாகிறது. மேலும், எப்போது வேண்டுமானாலும் இடம் காலி செய்ய சொல்வார்கள் என்ற அச்சமின்றி மக்கள் பாதுகாப்பாக வாழ முடிகிறது. அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வசிப்பவர்கள் தகுதியுடையவர்கள். பட்டா பெறும் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். நீர்நிலைகள், ஓடைகள், குளங்கள், கோயில் நிலங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்கப்படாது. எனினும், அவர்களுக்கு மாற்று இடங்களில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்படும்.
வழங்கப்படும் நில அளவு
கிராமப்புறங்களில்: அதிகபட்சம் 2 முதல் 2.5 சென்ட் வரை
நகர்ப்புறங்களில்: 1.25 முதல் 1.5 சென்ட் வரை
சில நேரங்களில் 3 சென்ட் வரை நீட்டிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவையான ஆவணங்கள்
1. வீட்டு வசதி இல்லாததை உறுதி செய்யும் சான்று
2. குடும்ப அட்டை / ஆதார் கார்டு / புகைப்படம்
3. வருமானச் சான்று
4. சாதி சான்று (தேவையெனில்)
5. நீண்டகால வசிப்பு ஆதாரம்
விண்ணப்பிக்கும் முறை
வீட்டு மனை பட்டா பெற விரும்புவோர், தங்கள் அருகிலுள்ள தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பின்னர், வருவாய் அதிகாரிகள் (வட்டாட்சியர், நில அளவர்) ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குவார்கள். சமீபத்தில், சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் உள்ள “பெல்ட் ஏரியா” பகுதிகளில் வசிக்கும் தகுதியான மக்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற உள்ளன.





