ஒரு தமிழ் நடிகருக்காக வெளிநாட்டில் இவ்வளவு பெரிய கூட்டமா? என உலகமே ஆச்சரியப்படும் வகையில் மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட விழா களைகட்டியுள்ளது. இன்று பிற்பகல் கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் (Bukit Jalil) மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படை எடுத்து வருவதால், அந்தப் பகுதியே மனிதக் கடலாகக் காட்சியளிக்கிறது.
5 கி.மீ தூரத்திற்கு டிராஃபிக் ஜாம்: புக்கிட் ஜலீல் மைதானத்தை இணைக்கும் அனைத்து முக்கிய சாலைகளும் இன்று மதியத்தில் இருந்தே முடங்கியுள்ளன. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, கேசாஸ் (KESAS) நெடுஞ்சாலை மற்றும் புக்கிட் ஜலீல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
காவல்துறையினர் திணறல்: நிலைமையைக் கட்டுப்படுத்த மலேசியக் காவல்துறையினர் (PDRM) நூற்றுக்கணக்கான வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனாலும், மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் மற்றும் கார்களில் ரசிகர்கள் வருவதால், வாகனங்களை நிறுத்தக் கூட இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பலர் தங்கள் வாகனங்களைச் சாலையோரங்களிலேயே நிறுத்திவிட்டு, மைதானத்திற்கு 2 முதல் 3 கி.மீ தூரம் வரை நடந்தே செல்லத் தொடங்கியுள்ளனர்.
ரசிகர்களின் ஆரவாரம்: மைதானத்திற்கு வெளியே “தலைவா.. தளபதி..” என்ற கோஷம் விண்ணைப் பிளக்கிறது. மலேசியத் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, சீன மற்றும் மலாய் இனத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்களும் இந்த ‘தளபதி திருவிழா’ கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர். “தமிழகத்தில் தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, இங்கே பாருங்கள் எங்கள் பலத்தை” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அமைப்பாளர்கள் வேண்டுகோள்: கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால், மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் பொறுமையைக் கடைபிடிக்குமாறும், போக்குவரத்து விதிமுறைகளை மதிக்குமாறும் விழா அமைப்பாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


