திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள ஆ. கலிங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 78 வயதான விவசாயி கந்தசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது இரு மகன்கள் அண்ணாதுரை மற்றும் சின்னசாமி ஆகியோருக்கு எழுதி கொடுத்திருந்தார். ஆனால் சொத்துகளை பெற்றுக்கொண்ட பிறகு இருவரும் தந்தையை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் தனது தந்தை வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் தனியாக சேமித்து வைத்த பணத்தையும் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. கந்தசாமிக்கு தினசரி உணவு கூட வழங்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கந்தசாமி மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் பலமுறை காவல்துறையிலும், வருவாய்த்துறையிலும் புகார் அளித்தும் தீர்வு கிடைக்காத சூழ்நிலையில் இருந்தார். Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மகன்கள் தந்தையை பராமரிக்காத காரணத்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர். இதனிடையே, கடந்த வாரம் கிராமத்தில் நடைபெற்ற ஊர்திருவிழாவில், இரு மகன்களும் ஆடு வெட்டி சமைத்து உணவு உண்ட போதும், கந்தசாமிக்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த வேதனையடைந்த கந்தசாமி, நேற்று நள்ளிரவு தன்னுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மூத்த மகன் அண்ணாதுரையை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக மணப்பாறை காவல் நிலைய போலீசார், ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.