மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டார், இதுவரை கைதானோர் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, கடந்த ஜூன் 25 ஆம் தேதி மாலை, தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில், கல்வி தொடர்பான விவரங்களை நிரப்ப வேண்டும் என்ற காரணத்தால் மாணவி வரவழைக்கப்பட்டார். பின்னர், பாதுகாவலரின் அறைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி, அங்கு முன்னாள் மாணவரும் இரு மூத்த மாணவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவம் கஸ்பா காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவத்தின்போது மாணவியை இரவு 10 மணி வரை துன்புறுத்தியதாகவும், அவ்வப்போது மாணவியைக் கைப்பேசியில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அதை வெளிப்படுத்துவோம் என்று மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் முதலில் முன்னாள் மாணவரும், இரண்டு மூத்த மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இப்போது கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதால், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் தற்போது அலிபூர் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருவதாகவும், அவர் ஒப்பந்த அடிப்படையில் கல்லூரியில் பணியாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாணவியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பிய முன்னாள் மாணவனின் முயற்சியை மாணவி மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் இக்குற்றம் நிகழ்த்தப்பட்டதாகவும், மாணவிக்கு மாணவர் சங்க தலைவராக பதவி வழங்கப்படும் என்று கூறி நம்பவைத்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையும் சட்ட உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. கொல்கத்தா மக்கள் மற்றும் மாணவர் சமூகத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.