கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீது பயங்கரமான பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரனுடன் வாழ்ந்துவந்த மூதாட்டி வழக்கமாக காலை, மாலை என இருவேளை சாலையோரமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை நடைப்பயிற்சிக்காக சென்ற போது, சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்களால் அவரது மேல் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மூதாட்டியை அருகிலுள்ள சவுக்கு காட்டிற்குள் இழுத்துச் சென்ற அவர்கள், அவரது ஆடைகளை கிழித்து பாலியல் வன்முறை மேற்கொண்டதோடு, சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் மண் அடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
தீவிர காயங்களுடன் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானதாக சந்தேகிக்கப்படும் சுந்தரவேல் என்பவரை போலீசார் விரட்டி பிடிக்க முயன்ற போது, ஏற்பட்ட மோதலில் அவரை காயப்படுத்தி கைது செய்தனர்.
சுந்தரவேலை போலிசார் காலில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. குண்டுக்காயத்துடன் அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரவேலை பிடிக்கும் முயற்சியில் இரு காவலர்களும் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.