தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உணவுக்கு பின்னர் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் வசித்து வந்தவர்கள், கடந்த இரவு எப்போதும் போல இரவு உணவை அருந்தினர். ஆனால், சில மணி நேரங்களுக்குள் 11 பேருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் சங்கர் கணேஷ் (48), முருகம்மாள் (45) மற்றும் அம்பிகா (40) ஆகிய மூவரது உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 8 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அவர்களுல் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வின் பின்னணியில் உணவில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது கெட்டுப்போன உணவா? என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உணவுப் பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, உண்ணப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூல காரணம் தெரிய வரும் வரை அந்த இல்லத்தில் உணவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆதரவற்றோர் இல்ல நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த இல்லத்தில் உள்ள பிற மக்களின் உடல்நிலை குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மூன்று உயிர்களை பறித்த இந்நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவலான கண்டனத்தையும், வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது. ஆதரவற்றோர் வாழ்க்கையில் பாதுகாப்பும், மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் இது பெரிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.