திரைப்பட உலகில் தனக்கென தனி அடையாளம் பதித்த நடிகை சாந்தி மணி தற்போது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர், தற்காலிகமாக சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் 18 வயசுல இருந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். அந்த நேரத்தில் என் அக்கா டீச்சரா வேலை பார்த்தாங்க.
அவர் சம்பளம் ரூ.400. அதைக் கொண்டு சேலத்திலிருந்து சென்னைக்கு வந்தேன். என் அம்மா விஜயகாந்த் நடித்த ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்தது சினிமாவுக்கு என்னை இழுத்து வந்தது,” என தெரிவித்துள்ளார். மேலும், ‘விஜய்’ நடிப்பில் உருவான ‘வாரிசு’ படத்தில் நடிக்க அழைத்துவிட்டு ஏமாற்றப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். “ஒரு ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தாங்க, ஆனால் ஐந்தாயிரம் ரூபாய் பேசினாங்க” எனக்கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது மூன்றாண்டுகளாக பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என்றும், குடும்பச் செலவுகள் கூட கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “வீட்டுவாடகை ரூ.4000, மின்சாரம் உள்ளிட்ட மற்ற செலவுகள் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் ஆகுது. இதையும் கொடுக்க நிறைய சிரமமாக இருக்கு,” என்றார். 2004ஆம் ஆண்டு கணவர் காலமானதும், மகனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். “நான் எந்த கதாபாத்திரமும் செய்வேன், வாய்ப்பு கொடுங்க,” என சாந்தி மணி தனது உருக்கமான வேண்டுகோளை தெரிவித்தார்.