பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பரப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் செயல் தலைவர் அன்புமணி கடும் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பு, செளமியா அரசியல் ரீதியான முடிவு ஆகியவை அனைத்தும் அன்புமணி காரணம் என்றார். அந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற பாமக சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி தெளிவாக பேசினார். தனது மகள் சங்கமித்ராவுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பாமகவில் நிர்வாக அதிகாரம் முழுவதும் தன்னிடம் தான் இருப்பதாகவும், ராமதாஸ் கூறுபவை பொய்கள் எனவும் வலியுறுத்தினார்.
ராமதாஸ் தனது ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி புதிய நிர்வாகத்தை அமைத்த விதம் கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது எனவும், பாமகவில் பொதுக்குழுவை நடத்துவது நிறுவனர் வழிகாட்டுதலின் கீழ் அல்லாது, தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரின் முடிவின்படியே நடக்க வேண்டியதாகவும் அன்புமணி கூறினார். அதையடுத்து, தனிப்பட்ட வாழ்க்கையை ராமதாஸ் பொதுவெளியில் பேசுவதை அன்புமணி கடுமையாக எதிர்த்தார். ‘தன் மகனையும், மருமகளையும் இப்படிப் பொதுவாக விமர்சிப்பது எந்த அளவுக்கு நியாயம்?’ என்று கேள்வி எழுப்பினார். குடும்பத்தில் இருந்து இத்தகைய விமர்சனங்களை எதிர்பார்க்கவில்லை என்றும், தானும் தொடர்ந்து அமைதியாக இருந்ததால் பொய்கள் மட்டுமே வெளியே போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். தற்போது பாமக உள்நாடகத் தகராறு எந்த புதிய பாதையில் செல்லப்போகிறது என்ற கேள்வி கட்சி உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.