அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், லண்டனின் காட்விக் விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் தவறி விழுந்தது. இந்த பயங்கரமான விபத்தில் விமானத்தில் பயணித்த 254 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்த இடத்தில் இருந்த மருத்துவ விடுதி முழுவதுமாக நொறுங்கியது. உள்ளே இருந்த மாணவர்கள், இளநிலை மருத்தவர்கள் பலரும் மரணமடைந்தனர். இந்நிலையில், பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர் பிரதீக் ஜோஷி (45), அவரது மனைவி கோமி வியாஸ் (40) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் வயதுகள் 5 முதல் 13 வரை உயிரிழந்த செய்தி அனைவரின் மனதையும் பதறவைத்துள்ளது.
இந்த குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக உதைப்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். அவர்கள் லண்டனில் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கவிருந்தனர். பிள்ளைகளுக்கான புதிய பள்ளி, வீட்டுத் தேடல், எதிர்காலக் கனவுகள் –எல்லாம் சில நிமிடங்களில் சிதைந்து விட்டன. விமானம் புறப்படும் முன் குடும்பம் எடுத்த செல்ஃபி ஒன்று, தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் உள்ள புன்னகைகள் இன்று காணவில்லை. அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் உற்சாகம், எதிர்பார்ப்பு, அன்பு எல்லாம் காற்றாகி விட்டது. விமான விபத்தின் பின்னணியில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஏர் இந்தியா மற்றும் விமானப் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்துக்கான காரணங்களை சுட்டிக்காட்டும் வகையில் பிளாக் பாக்ஸையும் விமானத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோகம் வெறும் ஓர் குடும்பத்தின் இறப்பு மட்டும் அல்ல. இது பல்லாயிரம் கனவுகள் நொறுங்கிய தருணம். வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அடுத்த நொடியே நிச்சயம் இல்லையென்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.