சினிமா பாணியில் கண்களில் மிளகாய் தூள் தூவி கொள்ளை சம்பவம்!! பின்னணி என்ன??

சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெள்ளக்கல் கிராமத்தைச் சேர்ந்த சப்தகிரி என்பவர், சென்னையின் மதுரவாயலில் முட்டை வியாபாரம் நடத்தும் செல்வராஜ் என்பவருடைய நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரவு, செல்வராஜ் நிறுவனம் வழங்கிய ரூ.10 லட்சம் பணத்தை, முட்டை கொள்முதல் செய்வதற்காக நாமக்கல்லுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பணத்தை லாரி ஓட்டுநர் இருக்கையின் கீழ் வைத்துக்கொண்டு சப்தகிரி தனது பயணத்தைத் தொடங்கினார். அதிகாலை 4 மணியளவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியில் சுடுகாடு அருகே லாரியை நிறுத்தி சிறுநீர் கழிக்க வெளியே சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரது மீது மிளகாய்ப் பொடியை தூவினர். சப்தகிரி கண்களில் எரிச்சலுடன் அலறித் துடிக்கையில், ஒருவன் அவரைப் பிடித்துக் கொண்டான். மற்றொருவர் லாரியின் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த காரில் ஏறி திருச்சி வழியாக தப்பிச் சென்றனர்.

சம்பவம் நடந்தவுடன் சப்தகிரி விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கொள்ளை திட்டம் ஏற்கனவே திட்டமிட்டதா? சப்தகிரிக்கும் சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? பணம் எடுத்துச் செல்லும் தகவல் எப்படி மர்ம நபர்களுக்கு தெரிந்தது? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையிடுகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram