108 சேவையில் டிஜிட்டல் புரட்சி:
தமிழகத்தில் அவசர கால மருத்துவத் தேவைகளுக்காகச் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய மைல்கல்லாக வாட்ஸ்அப் மூலம் ஆம்புலன்ஸ் புக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்தச் சேவையைச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முகவரியை விளக்குவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, விரைவாகச் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
பொதுமக்கள் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தங்கள் கைப்பேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் இந்த எண்ணிற்கு ‘Hi’ என்று செய்தி அனுப்பினால், உடனடியாக ‘Book Ambulance’ என்ற இணைப்பு (Link) கிடைக்கும். அதனைத் தொட்டு உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தைப் (Live Location) பகிரலாம். தகவல் கிடைத்தவுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் மற்றும் ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
லைவ் டிராக்கிங் வசதி:
இந்த வசதி மூலம் ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் பெயர் மற்றும் தொடர்பு எண் போன்ற விவரங்கள் உங்களுக்குக் குறுஞ்செய்தியாக வரும். மேலும், ஆம்புலன்ஸ் தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது, உங்களை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் மேப் மூலம் நேரலையில் பார்த்துக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் இந்த வாட்ஸ்அப் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





