2018-ம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகளை கைது செய்து, குற்றவாளிக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்த காவல் ஆய்வாளர் கருணாகரனை, சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டியதுடன், வெகுமதியையும் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியார் ஓட்டல் ஒன்றின் அருகே 2018 அக்டோபர் 14ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் நடந்து செல்வதைக் கண்ட குற்றவாளிகள், அவரை அடித்து பணம் பறித்து, பின்னர் சாலையில் தள்ளிவிட்டனர். அதே நேரத்தில் வந்த மாநகரப் பேருந்தில் சிக்கி அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கருணாகரன் தலைமையிலான போலீஸ் குழு தீவிர விசாரணை நடத்தியது. வழிப்பறி, ஆதாய நோக்கத்துடன் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மதுரைச் சேர்ந்த கமல் என்ற முத்து (28) என்பவரையும், அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.
வழக்கு, அல்லிக்குளத்தில் உள்ள 21-வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் போலீசாரின் ஆவணங்கள் அடிப்படையில், நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் மதுரை முத்துவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். துணிச்சலாகவும், துல்லியமாகவும் வழக்கை விசாரித்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த கருணாகரனை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டி, புகழ்ச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.