அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிக முக்கியமான சந்திப்பு, உலக நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக டிரம்ப் இந்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள நேரடிப் போர் காரணமாக, இந்தப் பயணத்தை டிரம்ப் தற்போது அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய கிழக்கில் தற்போது நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் ஈரான் உடனான போர் நடவடிக்கைகளைக் கவனிப்பது இப்போது எனது முதல் கடமையாகும். எனவே, எனது சீனப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை என்றும், இன்னும் 5 முதல் 6 வாரங்களில் தான் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திப்பேன் என்றும் டிரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார். ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் போன்றவற்றால் உலகளாவிய எரிசக்தி சந்தை நிலைகுலைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் போர்க்கள வியூகங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்த 6 வாரங்களுக்குள் ஈரான் விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை எட்டிவிட முடியும் என அமெரிக்கா நம்புவதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது. அதே சமயம், சீனாவும் அமெரிக்காவின் இந்த முடிவைப் புரிந்துகொள்வதாகவும், தகுந்த நேரத்தில் டிரம்பை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட 6 வார காலத்தில் உலகப் பொருளாதாரம் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைப் பொறுத்தே டிரம்பின் சீனப் பயணத்தின் வெற்றி அமையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


