வளைகுடா பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நேரடித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது பதிலடியாக உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக அறிவித்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “ஹோர்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களைத் தடுத்தால், ஈரானை இதற்கு முன் தாக்கியதை விட 20 மடங்கு பலமாக தாக்குவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மீண்டும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு ஈரான் பயங்கரமாகத் தாக்கப்படும். எண்ணெய் வர்த்தகத்தைத் தடுத்தால் இறப்பு, தீ மற்றும் சீற்றம் (Death, Fire, and Fury) தான் ஈரானை ஆட்சி செய்யும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை ஏற்கனவே பெருமளவு அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் எஞ்சியிருக்கும் இலக்குகளும் தரைமட்டமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க கடற்படை எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் என்றும், எக்காரணம் கொண்டும் ஆற்றல் விநியோகத்தைத் தடுக்க விடமாட்டோம் என்றும் டிரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார். ஈரானின் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், அந்த நாடு முழுமையாக வீழ்த்தப்படும் வரை தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளதால் உலகமே பெரும் போர்ப் பதற்றத்தில் உறைந்து போயுள்ளது.


