தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய், தனது கட்சி தலைவர் ரோலில் 42 நாட்கள் நீடிக்கும் மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். இது விஜய்க்கு அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. விஜய் முதலில் மதுரையை தேர்வு செய்யலாம் என கூறப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் திருச்சியையே ஆரம்ப புள்ளியாக மாற்றியுள்ளார். திருச்சி தமிழ்நாட்டின் மையப் பகுதியாகவும், ஏராளமான மாவட்டங்களுக்கு செல்ல உகந்த இடமாகவும் இருப்பதால், விஜய் இங்கு இருந்து பயணத்தைத் தொடங்குகிறார்.
இது கட்சி நிர்வாகிகளுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் 42 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்புகள், சாலை சந்திப்புகள், பொதுக்கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இதற்காக ஒரு பிரத்யேக பிரச்சார வாகனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் பயணத் திட்டங்கள், நிகழ்ச்சிகள், முக்கிய பிரச்சனைகள் பற்றிய அறிக்கைகள் உள்ளிட்டவைத் தயாராக உள்ளனர். புதிய கட்சியாக “தமிழக வெற்றிக் கழகம்” தன்னை அரசியலில் உறுதிப்படுத்தும் இந்த பயணத்தில், விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைந்த உத்தரவுகளை பிறப்பித்து, கோஷ்டிப் பிரச்சினைகளை தவிர்க்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் இளைஞர்கள், பெண்கள், சீனியர்கள் என அனைத்து தரப்பினரும் இடம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துள்ளதால் இனி முழு நேர அரசியல் வாழ்க்கைக்கு தயார் நிலையில் உள்ளார். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் வர உள்ள நிலையில், விஜய் கட்சி பூத் கமிட்டி மாநாடுகள், மாவட்ட நிகழ்ச்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் என அனைத்து முயற்சிகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருகிறது.
ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் இந்த மக்கள் சந்திப்பு பயணம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி வாசிகளும், விஜய் ரசிகர்களும் இதற்காக காத்திருக்கிறார்கள்.தமிழக அரசியலில் விஜயின் பயணம் வெற்றி பெறுமா, அல்லது சவால்களை சந்தித்தே தீருமா என்பது மக்கள் மனதிலும், எதிரணிகளின் கவனத்திலும் இருக்கிறது.