தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முன்பதிவு செய்தும் பல நாட்களாகச் சிலிண்டர் கிடைக்காத சூழல் நிலவுவது இல்லத்தரசிகளிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த செய்திகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசாதாரணமான சூழலைச் சீர் செய்ய அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், “மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இந்தச் சிக்கலில் எவ்விதத் தாமதமும் இருக்கக் கூடாது. எவ்விதத் தடையுமின்றி மக்களுக்குச் சிலிண்டர் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தவெக தனது கோரிக்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கட்சித் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, தற்போது நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் அரசுக்கு ஒரு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் தமிழக அரசியலில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.


