நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்த பிறகு கலந்துகொள்ளும் கடைசி சினிமா மேடை என்பதால், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, எதிரிகளை கையாள்வது குறித்து ஒரு ஆழமான தத்துவத்தை விஜய் மேடையில் உதிர்த்துள்ளார்.
எதிரி இருந்தால் தான் வலிமை: மேடையில் மைக் பிடித்த விஜய், “வாழ்க்கையில் ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனால், ஒரு வலுவான எதிரி தேவை. ஏன்னா, சும்மா வர்றவங்க போறவங்க எல்லாரையும் நாம எதிர்த்துக்கிட்டு இருக்க முடியாது. அப்படி பண்ணா அதுக்கு பேரு போராட்டமே கிடையாது. ஒரு வலுவான எதிரி உங்களுக்கு இருந்தால் தான், நீங்களும் ஒரு வலிமையானவராக மாற முடியும்,” என்று அதிரடியாக பேசினார்.
யார் அந்த ‘வலுவான எதிரி’? விஜய்யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. அவர் யாரை ‘வலுவான எதிரி’ என்று குறிப்பிடுகிறார்?
-
திராவிடக் கட்சிகளையா?
-
அல்லது மத்திய அரசையா?
-
அல்லது அரசியலில் தனக்கு சவாலாக இருக்கும் மற்ற தலைவர்களையா? என ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் ஒவ்வொரு விதமாக கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
வலிமையானவராக மாறும் தந்திரம்: எதிரி எவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறாரோ, அவ்வளவு உழைப்பும் வேகமும் நமக்கு தானாகவே வரும் என்பதை தான் விஜய் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார். 2026 தேர்தலுக்கு முன் தன்னை ஒரு வலிமையான சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் தயாராகிவிட்டார் என்பதையே அவரது இந்த ஆவேசப் பேச்சு உணர்த்துகிறது.
சும்மா வர்றவங்க போறவங்க” என விஜய் குறிப்பிட்டது தவெக-வை விமர்சிக்கும் சிறிய அரசியல் தலைவர்களைத் தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ, விஜய்யின் இந்த ‘எதிரி’ ஃபார்முலா இப்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


