2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விவசாயிகளை மையப்படுத்தி பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். காவிரி டெல்டா மக்களின் இதயத்தைத் தொடும் வகையில் அவரது அறிவிப்புகள் அமைந்துள்ளன.
விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி: “தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50% வரை கடனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என விஜய் அறிவித்தார். மேலும், ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்தாலும் விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் தனது அரசு அனுமதிக்காது என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இலவச உயர்கல்வி உறுதி: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், “2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை குடும்பங்களில், அரசு ஊழியர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்” என மேடையில் முழங்கினார்.
ரேஷன் மற்றும் கொள்முதல் நிலையங்களில் மாற்றம்: ரேஷன் கடைகளில் நிலவும் கூட்டத்தைக் குறைக்க, 500 கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும் என்றும், அரிசி தவிர மற்ற பொருட்கள் பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்படும் என்றும் விஜய் கூறினார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்க முடியாத அளவுக்கு வெளிப்படையான நிர்வாகம் கொண்டு வரப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.
திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் டெல்டா பகுதியில், விஜய்யின் இந்தத் ‘தஞ்சை பிரகடனம்’ 2026 தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


