திருச்சி: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திருச்சியில் இன்று 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் “நேரத்தை கடந்து பரப்புரை செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும்” என காவல்துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. மக்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆதரவை திரட்டும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் முதல் பிரச்சாரம் திருச்சியில் நடைபெற உள்ளது. “விஜயின் மக்களுடன் சந்திப்பு” என்று பிரச்சாரத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 90 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரம் ஆனது சனிக்கிழமை நாட்களில் குறிப்பாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றுள்ளார். விஜய் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் வாகனத்தில் புறப்பட்டு சென்றார். விஜயின் பிரச்சாரம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்த இருந்தது. காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர்.
தொடர்ந்து தனது பிரச்சார இடத்தை காந்தி மார்க்கெட் என்ற இடத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். பிரச்சாரத்தை நடத்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் நிபந்தனைகள் ஏற்கப்பட்டு பத்து முப்பது மணி அளவில் பிரச்சாரம் தொடங்க திட்டமிட்டு இருந்தது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் வரை மரக்கடை பகுதிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொண்டர்கள் மத்தியில் வாகன மெதுவாக முன்னேறிச் செல்கிறது. ஓட்டு நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். திட்டமிட்டபடி பிரச்சாரம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேரத்தை கடந்து பேசினால் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது. மேலும் விஜய்யை காண ஏராளமான தொண்டர்கள் ஒன்று திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் மயக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.


