உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பட்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் ஷீலு ரைக்வார் (30). இவர் இனிப்பு கடை நடத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டு பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஆராதனா (26) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பச்சிளம் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே ஆராதனா ஆன்லைன் ‘பப்ஜி’ மொபைல் கேமில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார். கணவர் கடையில் இருக்கும் நேரங்களில் முழு நாளும் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த சிவம் (25) என்பவருடன் ஆன்லைன் மூலமாக அறிமுகமானார்.
அந்த நட்பு நாளடைவில் தீவிர கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவன்-மனைவி உறவில் பிளவு ஏற்பட்டு, இடையிடையே கடும் சண்டைகள் நடைபெறத் தொடங்கின. ஒருமுறை தனது கணவரைத் தாக்கி, கணவர் மீது குடும்ப வன்முறை புகார் கொடுக்க ஆராதனா முயன்றதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ”எனது காதலுக்கு இடையூறாக இருந்தால் உன்னை 55 துண்டுகளாக வெட்டி கொன்று டிரம்மில் அடைத்து விடுவேன்” என்று ஆராதனா தனது கணவரை கொடூரமாக மிரட்டியுள்ளார். மனைவியின் இந்த மிரட்டலால் ஷீலு பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து, லூதியானாவிலிருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஆராதனாவின் காதலன் சிவம் நேரடியாக ஷீலுவின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ளவாரே ஆராதனாவுடன் நேரடியாகக் காதல் உரையாடியுள்ளார். இதனால் கடுப்பான ஷீலு, உறவினர்கள் மூலம் சிவத்தை வீட்டில் இருந்து வெளியேற்ற முயன்றார்.
ஆனால் சிவம் வெளியேற மறுத்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்தவொரு தடையும் இல்லாமல் ஆராதனா தனது கணவரையும், பிள்ளையையும் விட்டு சிவத்துடன் செல்ல முடிவு செய்தார். தனது மகனின் உயிருக்கும், தன்னுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதால் ஷீலு தனது மனைவியை காதலனுடன் செல்ல அனுமதித்து விட்டதாகவும், குழந்தை தன்னுடன் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பட்டிபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் சிவத்தை போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் சமூக ஊடகங்களிலும் பரவிக் கொண்டுள்ளது.