கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் மீண்டும் ஒரு வனவிலங்கு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சைமலை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. 6 வயது சிறுமி தனது தாயுடன் வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தபோது, திடீரென காட்டிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை தாக்கி காட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் தாய் தண்ணீர் குடத்தை உள்ளே வைக்க சென்றிருந்ததாகவும், வெளியே வந்தபோது சிறுமி மீது சிறுத்தை தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயின் அலறல் கேட்டதும் அருகிலுள்ள தொழிலாளர்கள் ஓடி வந்தனர். ஆனால் சிறுமியை சிறுத்தை ஏற்கனவே காட்டிற்குள் இழுத்துச் சென்றது. உடனடியாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் இணைந்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனிடையே, வனத்துறை அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும், சிறிது காலத்திற்கு பிள்ளைகளை கண்காணிப்புடன் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த தாக்குதல் வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த வனவிலங்கு சம்பவங்களில் ஒன்றை நினைவுபடுத்துகிறது. கடந்த அக்டோபரிலும் இதேபோன்ற தாக்குதலில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரின் மனதில் இன்னும் பதிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.