தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், முன்னாள் எம்.பி. தருண் விஜய் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருப்பது, அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் உயர்வு கிடைத்துவிட்டது என்கின்ற கூட்டணி வட்டார ஊகங்களுக்கு தீனியாக அமைந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அப்போது தேசிய அரசியலில் முக்கிய பங்கு பெறுவார் என கூறப்பட்டது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவருக்கு விரைவில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என உறுதிப்படுத்தினார். இதையடுத்து அண்ணாமலை மத்திய இணையமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், மாநிலங்களவை எம்.பி. ஆகலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னாள் எம்.பி. தருண் விஜய், அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு திருக்குறளையும் மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளர். தமிழ் மொழி, திருவள்ளுவர் குறள்கள் குறித்து தன்னிச்சையாக பேசிக்கொண்டே இருக்கும் தருண் விஜய், அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பொதுச் செயலாளர் பதவியின் முக்கியத்துவம்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி சாதாரணமானது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடந்த காலத்தில் இந்தப் பதவியில் இருந்து உயர்ந்தவர்கள் என்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் வாய்ப்பு உறுதியாகிறது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக தலைமை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே அண்ணாமலை ஆதரவாளர்கள் இன்னும் கண் விழித்து காத்திருக்கின்றனர்.