மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில், நாளை (ஞாயிறு, ஜூன் 22) நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சமீப நாட்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்மிக நிகழ்வில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டில் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், இத்தகவல் குறித்து அதிகாரப்பூர்வ மறுப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் பிஆர்ஓ (பிரசார நிர்வாகி) ரியாஸ் அகமது தனது “எக்ஸ்” (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் என்று பரவும் தகவல் பொய்யானது. தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை,
எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டை நடத்துவதற்காக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், சில முக்கியமான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை: மாநாட்டில் அரசியல் நிகழ்வுகள், பிரசாரம் நடைபெறக்கூடாது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் காப்பீடு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றுகளை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதி அளிக்கப்படும். மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாநாடு ஆன்மிக நோக்கில் நடத்தப்படுவது என்பதையும், அரசியல் கலந்த செயல்பாடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.