சேலம் : சேலம் மாநகராட்சியில் இன்று (மே 29) நடைபெற்ற மன்றக்கூட்டம் எதிர்பாராத பரபரப்புக்கு காரணமாகியுள்ளது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றம், சண்டை வரை செல்வதற்குள் தடுக்க முடியாத நிலை உருவானது. அதிமுக குழுத் தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி பேச முயன்றபோது, திமுக வை சேர்ந்த கவுன்சிலர் சுகாசினி அவரை மடக்கினார். இதனால், கட்சிகள் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது.
இந்த நேரத்தில் சுகாசினி, கோபமடைந்து யாதவ மூர்த்தியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. திடீர் தாக்குதலால் மன்றக்கூட்டத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சாடிக்கொண்டனர்.
தங்கள் குழுத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, அதிமுக கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் என்ன செய்வதென்று அறியாமல், மன்றக்கூட்டம் ஒரு கட்டத்திற்கு பின் நிறுத்தப்பட்டது. திமுக கவுன்சிலரும் அதிமுக கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.