கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹேல் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்த சேலத்தை சேர்ந்த சர்புதீன் மனைவி கதீஜா மண்டபத்தின் அறையில் இருந்த அலமாரியில் 21 சவரன் தங்க நகைகளை பத்திரப்படுத்தியுள்ளார்.
மறுநாள் பார்த்தபோது தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கதீஜா புகார் கொடுத்துள்ளார். பர்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புகாரின் பேரில் போலீசார் மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதிகாலை இரண்டு இளைஞர்கள் மண்டபத்துக்கு வந்து நகைகளை எடுத்துச் சென்றது சிசிடிவி காண்பிக்கப்பட்டது.
செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தியதில் சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் என தெரியவந்தது. கிஷோர் என்பவர் கதீஜா உடன் தங்கியிருந்த ஷீபா என்ற பெண்ணுடன் அடிக்கடி போன் செய்து பேசி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் கிஷோரின் காதலி என தெரிய வந்தது. மேலும், காதலனுக்கு உதவி செய்ய காதலி திருமண மண்டபத்தில் திட்டமிட்டு 21 சவரன் தங்க நகைகளை திருடி விட்டு காதலனை திருமண மண்டபத்திற்கு வரவழைத்து கொடுத்து அனுப்பி உள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷீபா, காதலன் கிஷோர்,கிஷோரின் தந்தை மகேந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய நான்கு பேரை பர்கூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். கிஷோருடன் சேர்ந்து வந்து திருமண மண்டபத்தில் இருந்து நகையை வாங்கி சென்ற ஜோதி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர் பர்கூர் காவல்துறையினர்.